×

ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனு தாக்கல்!

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு 3-வது முறையாக மனுதாக்கல் செய்திருந்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டது விசாரணையில் தான் தெரியவரும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு என குறிப்பிட்டுள்ளது. ஆவணங்கள் மாற்றியமைக்கப்பட்டதை சந்தர்ப்ப சூழ்நிலை மாறியதாக கருதுகிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு விரைவில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

 

The post ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனு தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Madras High Court ,Chennai ,Chennai District Principal Sessions Court ,Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...